விருதுநகர்: சிறைகளில் கைதிகள் மரணம் என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்துகிறது. இச்சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. காவல்துறை சீரமைக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு 250 பள்ளிகளை சேர்ந்த 1,200 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகம் ஒன்றாக இருக்க வேண்டும். இது நமது வாழ்வாதாரப் பிரச்சினை. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. முதல்வர் இதுதொடர்பாக குழு அமைக்கலாம். மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அரசியல் பார்க்காமல் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும்.
இஸ்ரோவில் இருந்து விஞ்ஞானிகள் பலர் வெளியேறுவது அதிர்ச்சிக்குரியது. இது தடுக்கப்பட வேண்டும். இதற்கு பிரதமர்தான் பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக குரல் எழுப்புவோம். எம்.பி.க்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் நடத்தக் கூடாதுஎன்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவோம். சிறைகளில் மரணம் என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்துகிறது. இச்சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. தமிழக காவல்துறை சீரமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.