திமுக தலைவர் ஸ்டாலின்

 
தமிழகம்

காவிரி விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து ஆக.3-ல் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வேதனை தரும் த.வெ.க. ஆட்சி, விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

தேர்தலுக்கு முன்பு, “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என தவெக தெரிவித்தது.

தேர்தலுக்குப் பின்பு 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன்காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதல்வர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜூன் 11 அன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதல்வர் நேரில் சந்தித்து மேகேதாட்டு திட்டத்துக்கு நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார். ஜூன் 12 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகேதாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.

ஜூலை 27 அன்று டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகேதாட்டு அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகேதாட்டு அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் தொடர்ந்து மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் கர்நாடக முதல்வர் பேசி வருகிறார். இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.

இதற்கிடையில், தமிழ்நாடு முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.

இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதல்வரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் கர்நாடகா செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது. தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதல்வர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் யார் குரலையும் கேட்காமல் செயல்பாடற்று இந்த அரசு இருப்பது நல்லதல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்வர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது. இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.

1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.

2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.

3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.

இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.

இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT