‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை’ என்று விசிக தலைவர் திருமாவளவன் விவரித்திருக்கும் நிலையில், “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைதான் விஜய் என்று சொன்ன திருமா, இப்போது அந்தப் பிள்ளையை சீராட்டி, தாலாட்டி வளர்த்தெடுக்கப் போயிருக்கிறாரா... இப்போது அம்பேத்கர், பெரியார் எல்லாம் எங்கே போனார்கள்..?” இப்படியொரு விமர்சனம் விசிக வட்டாரத்துக்குள்ளேயே இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த விமர்சனத்தை பற்றவைத்திருக்கும் விசிக முக்கிய நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசினோம். “எப்போதுமே முடிவுகளை தெளிவாக எடுக்கும் திருமா, இந்தத் தேர்தலில் ரொம்பவே நிலை தடுமாறிவிட்டார். திமுக-விடம் 10 தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டிருந்தாலும் தந்திருப்பார்கள்.
ஆனால், ஏனோ அதை அழுத்திக் கேட்கும் நிலையில் அவர் இல்லை. அதனால், போனதும் காபியைக் குடித்துவிட்டு 8 சீட்டுக்கே ஓகே சொல்லிவிட்டு வந்துவிட்டார். அதேசமயம், ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு ஆகியோர் திமுக அனுதாபிகளாக இருக்கிறார்கள். அதனால் இம்முறை அவர்களுக்கு சீட் தருவதில்லை என்றும் முன்கூட்டியே முடிவாகிவிட்டது.
அதனால்தான் தொகுதிகள் எண்ணிக்கை முடிவானதும் 3 நாட்கள் டெல்லியில் போய் முடங்கினார் திருமா. திமுக தொடர்ச்சியாக அழைத்த பிறகே தொகுதிகளை இறுதி செய்ய டெல்லியிலிருந்து கிளம்பி வந்தார். தொகுதிகள் முடிவானதும் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு ஓட்டல் ஓட்டலாக மாறிமாறி ஓடிக்கொண்டு இருந்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே போட்டியிடப் போவதாக அறிவித்த திருமா, ‘தொங்கு சட்டமன்றம் அமையலாம்’ என்று பலர் முன்னிலையில் அதற்கான காரணத்தைச் சொன்னார். இது திமுக தலைமைக்கு தெரிந்ததும் அவர்கள் டோட்டல் அப்செட். திருமா சட்டப்பேரவைக்கு வந்தால் அவரது சிதம்பரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மீண்டும் 50 கோடியை யார் செலவழிப்பது என்ற கேள்வி திமுக தரப்பில் எழுப்பப்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் தனது முடிவை மாற்றிக்கொண்ட திருமா, தனக்குப் பதிலாக, காங்கிரஸ்காரரான ஜோதிமணியை காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக்கினார். அந்தத் தொகுதியின் அப்போதைய சிட்டிங் எம்எல்ஏ-வான சிந்தனைச் செல்வன் மீண்டும் அந்தத் தொகுதியையே கேட்டு மன்றாடியும் அவர் மனம் மாறவில்லை. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே திமுக - விசிக தொண்டர்கள் இடையே இணக்கத்தை உருவாக்கவில்லை. இது திருமாவுக்கும் தெரியும். அதனால்தான் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, ‘சில இடங்களில் விசிக தோழர்கள் திமுக வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை’ என்று அவரே சொன்னார்.
விசிக கேட்ட தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை என்று சொன்ன திருமா, ‘பல்லாவரம் கேட்டோம் பண்ருட்டியைக் கொடுத்தார்கள், அரூரைக் கேட்டோம் அரக்கோணம் கொடுத்தார்கள்’ என்றெல்லாம் புலம்பினார். ஆனால், அப்படியெல்லாம் கேட்கவில்லை என்று திமுக தரப்பில் இருந்தே எங்களுக்குச் சொன்னார்கள். அப்படியே கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் ஷா நவாஸுக்காக அவரது சிட்டிங் தொகுதியான நாகையையாவது கேட்டு வாங்கிஇருக்கலாமே... இருபது வருடங்களுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு காங்கிரஸ்காரரை வம்படியாய் இழுத்துவந்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
தேர்தலுக்கு முன்புதான் இப்படி என்றால் ரிசல்ட்டுக்குப் பிறகு திருமா எடுத்த முடிவுகளும் குழப்பத்தின் உச்சம். தன்னைச் சந்தித்த கூட்டணித் தோழர்களிடம் ‘நீங்கள் என் கூடவே இருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். ஆனால் ஆதவ் அர்ஜுனா, ‘நீங்கள் கம்யூனிஸ்ட்களையும் அழைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்’ என திருமாவுக்கு அசைன்மென்ட் கொடுத்தார். கம்யூனிஸ்ட்களும் முதல் ஆளாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்கள். அதன் பிறகுதான் ‘திருமாவை முதல்வராக்குகிறோம்’ என்று அதிமுக-வும் திமுக-வும் சேர்ந்தே ஆஃபர் வைத்தன.
அதனால் தனது முடிவை அறிவிக்காமல் தாமதப்படுத்திய திருமா, இது விஷயமாக கம்யூனிஸ்ட்களிடமும் பேசினார். ஆனால் அவர்களோ, ‘தோழர் இது எங்களின் பொலிட் பீரோ எடுத்த முடிவு; அப்படி எல்லாம் மாற்ற முடியாது’ என தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டார்கள். பாமக-வும் திருமாவை முதல்வராக்க சம்மதிக்கவில்லை. இத்தனைக்கும் பிறகுதான் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் முடிவுக்கு வந்தார் திருமா.
அதைத்தொடர்ந்து, வன்னி அரசுவை அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்வதில் விசிக-வுக்குள் இரண்டு விதமான கருத்துகள் வெடித்தன. அவரை அமைச்சராக்கினால் இன்னொரு பவர் சென்டர் ஆகிவிடுவார் என்று சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். தவெக தரப்பும், திருமாவே அமைச்சரானால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தைச் சொன்னது. இருப்பினும் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வன்னி அரசுக்கே வாய்ப்பளித்தார் திருமா. இனி என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை” என்று சொல்லி முடித்தார்கள்.
“விஜய் சினிமா தியேட்டரில் விசில் அடிக்கட்டும்... சட்டமன்றத்தில் விசில் அடிக்க வேண்டாம்” என்று சொன்ன திருமா, இந்த விமர்சனங்களை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.