சென்னை: குற்ற வழக்குகளில் முக்கிய சாட்சிகளாக உள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக அரசு மற்றும் போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் முக்கியசாட்சிகளாக உள்ள குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனைப் பாதுகாக்க உரிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, இது தொடர்பாக வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்றும், முறையான அரசாணைக்காக காத்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து வரைவு நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களும் கருத்துகளை தெரிவிக்கும் வண்ணம் குழந்தைகள் பாதுகாப்பு தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘துளிர்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வித்யா ரெட்டி, “இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் இன்னும் சில முக்கியமான விதிமுறைகளைச் சேர்க்க வேண்டும்” என்றார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினமும் சில பரிந்துரைகளை தெரிவி்த்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இது தொடர்பாக தொண்டு நிறுவன பிரதிநிதிகள், துறைசார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒன்றாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்” என்றனர்.
மேலும் இந்த வழக்கில், வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசும், போலீஸாரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14-க்கு தள்ளிவைத்துள்ளனர்.