தமிழகம்

குதிரை பேர வழக்கில் 14-வது நபருக்கும் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக கைதான வழக்கில் 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீஸார், 14 பேரை கைது செய்தனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுள்ள இந்த வழக்கில், இதுவரை 13 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தினரின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜாமீன் கோரி கிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன் மூலம் குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குதிரை பேர வழக்கில் கார்த்திகேயராஜா என்பவர் முன்ஜாமீன் கோரிய மனுவை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

வழக்கில் ஜாமீனில் விடுதலையான சேதுராஜ், ராஜசேகர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தியும் நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT