சென்னை: “மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது. இதில் நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது. இது அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது முதல், பெண்களை பாதுகாக்கும் சிங்கப்பெண் திட்டம் வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்கள் என்ன எதிர்பார்த்து எங்களுக்கு வாக்களித்தார்களோ அது அனைத்தும் நிறைவேற்றப்படும்.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் கடும் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவார். பழைய திட்டங்கள் என்னென்ன உள்ளதோ அவையெல்லாம் தொடரும் என சொன்னதன் அடிப்படையில், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவித தடைகளும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்.
மதுரை மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் வசதி அடிப்படை தேவையாக உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். வரப்போகும் பட்ஜெட்டில் நிதி ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்து மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்.
நாங்கள் 120 பேரின் ஆதரவை ஆளுநரிடம் முதலில் அளித்தோம். அதன் பின்னர் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து எங்களுக்கு பலரும் ஆதரவளித்தனர். இதனால் 144 எம்எல்ஏக்கள் எங்கள் அரசுக்கு ஆதரவளித்தனர். மக்கள் அளித்த ஆதரவை யாரும் எதுவும் செய்ய முடியாது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது. இதில் நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது. இது அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஊழல் இல்லாமல் தடுக்கும் முன்னெடுப்பை எங்கள் முதல்வர் எடுத்துள்ளார். எனவே ஊழலை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
நீட் தேர்வு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு தேர்வைக் கூட அவர்களால் ஒழுங்காக நடத்த முடியவில்லை. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
நீட் தேர்வு மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, ஏழை எளிய மக்களுக்கு எட்டாத தேர்வாக உள்ளது. நீட் தேர்வு முறை வேண்டாம் என்பதே எங்கள் நோக்கம். நீட் தேர்வால் எந்தப் பயனும் இல்லை. நீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் சீட் வாங்குகிறார்கள். தகுதியானவர்களை தேர்வு செய்யவே நீட் என்றார்கள், அது நடக்கவில்லை.
டாஸ்மாக் நேரம் குறைக்கப்படுமா என்பதை முதல்வர்தான் முடிவு செய்வார்.
அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அது குறித்து பேச எங்களுக்கு உரிமை இல்லை. திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமியின் மகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து முயற்சி செய்தனர் என்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்கான முயற்சி 100 சதவீதம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
அதிமுகவில் இருந்து சில முக்கிய தலைவர்கள் எங்கள் தலைவரை சந்திக்க விரும்பினர். அவர்களை முதல்வர் சந்தித்ததில் தவறு இல்லை. எடப்பாடி பழனிசாமியை இப்போது சந்தித்தால், அது சரியாக இருக்காது என்பதால், அந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யவில்லை” என்றார் அமைச்சர் நிர்மல் குமார்.