லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சி.முருகானந்தம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ.ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஜனநாயகத்தின் அடித்தளங்கள். வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியவை குறித்த கல்வியே வாக்காளரியல் கல்வியாகும்.
வாக்கு,வாக்காளர், தேர்தல் ஆகிய அம்சங்களில் ஊழல் ஏற்படும்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன ஜனநாயகத்தின் எதிரிகள். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வாக்காளரியல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வது அவசியம்.
வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதைப் பெற்றுத் தரவும், வாக்காளரியல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்களாக அரசியலமைப்பில் வகைப்படுத்த வேண்டும்.
சட்டங்களை இயற்ற நாடாளுமன்றமும், சட்டப்படி ஆட்சியை நடத்த அரசாங்கமும், சட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு இணையான அந்தஸ்தை தேர்தல் நிறுவனங்களுக்கும் அரசியலமைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்களில் ஏற்படும் ஊழல்களை அகற்றவும், மக்களாட்சியை பாதுகாக்கவும் இயலும்.
லோக் ஆயுக்தா என்பதற்கும், லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. லோக் ஆயுக்தா என்றால் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். நல்லாட்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் ஊழல் மிகப்பெரிய எதிரியாகும்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே முதலமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா உள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.