தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய தன்னார்வலர், ‘தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியது சரியா?, தவறா? என மாணவிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த திட்டம் சரி என்று ஒரு மாணவி மட்டுமே கையை உயர்த்தியுள்ளார். மற்ற மாணவிகள் தவறு என்று கூறி கையை உயர்த்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசின் திட்டத்துக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில், செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா அனுப்பியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த கடிதத்தில், ‘எஸ்ஆர்எம் பள்ளியில் சமீபத்தில் திடீர் ஆய்வு மேற் கொண்டபோது தலைமை ஆசிரியர் ஜீவா, விடுப்பு எதுவும் எடுக்காமல் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னார்வலர் பெண் ஒருவர் மாணவிகளி டையே அரசுக்கு எதிராகவும், அரசின் நலத்திட்டங்களை விமர்சித்தும் கேள்விகளை எழுப்பிய நிகழ்ச்சி சமூக வலைதளங்கயில் பரவி வருகிறது.
உரிய அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். மேலும், தலைமை ஆசிரி யருக்கான பொறுப்பை உதாசீனப்படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் ஜீவா இந்த பள்ளியில் தொடர்ந்து பணியாற்றினால் மாணவிகளின் கல்வி நலனுக்கு குந்தகம் ஏற்படும். தொடர்ந்து புகார்கள் வருவதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.