தமிழகம்

திருப்போரூர் கந்தசாமி கோயில் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதாக அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்று, அறநிலையத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 550 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2022 மே மாதத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

          

இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று குற்றம்சாட்டி வழக்கறிஞர் ஜெகநாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் குமாரவேல் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.

அப்போது, கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் மதிப்பிலான 226 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT