காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை: கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது என உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை காங்கிரஸ் கட்சி கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் கனவு. அந்தக் கனவு இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி காலத்தில் நடைபெற முடியாமல் போனது. சோனியா காந்தி பலமுறை முயற்சித்தும் நடைபெற முடியாமல் போனது. ஆனால் ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கையை ஏற்று ஒரு கூட்டணி அமைச்சரவையை அமைத்துள்ளார்.
ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர் பதவியை வழங்கிய முதல்வர் விஜய்க்கும், கட்சிக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் மாற்று அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது.
காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் லஞ்சம், லாவண்யம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்ற பெயரை உருவாக்குவோம். அரசியலில் விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது. கீழ்த்தரமான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி புறம் தள்ளி மேல்நோக்கி நகர பாடுபடும்” இவ்வாறு அவர் பேசினார்.