சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையுடன் நேற்று ஆதரவு கடிதம் வழங்கியது காங்கிரஸ். காங்கிரஸ் தமிழக மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் விஜய்யிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. விஜய் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய உள்ளார். மேலும் ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்படுவார். இதனால், தவெகவின் பலம் 106 ஆக குறையும். அதனால் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் செ.ராஜேஷ்குமார், மதுரை மேலூர் தொகுதியில் பெ.விஸ்வநாதன், மயிலாடுதுறை தொகுதியில் ஜமால் முகமது யூனுஸ், குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், விளவங்கோடு தொகுதியில் பிரவீன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த சூழலில் காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ், தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று சென்னை வந்தார். ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், கே.வி,தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வுக் குழுத் தலைவர், அகில இந்தியச் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் சட்டப் பேரவைக் காங்கிரஸ் தலைவராக செ.ராஜேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனை ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், செல்வப்பெருந்தகை, செ.ராஜேஷ்குமார் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றனர். அவர்களை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர், காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தை விஜய்யிடம் கிரிஷ் சோடங்கர் வழங்கினார்.
ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் நன்றி தெரிவித்தார்.
கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதிப்பது, காப்பது எங்கள் பொறுப்பு. அதன்படி, தமிழகக் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு, தவெகவுக்கு முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆதரவு, அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத, எந்தச் சமூக விரோத சக்திகளும் இந்த கூட்டணியில் இடம்பெறக் கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்படுகிறது. இந்த கூட்டணி உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவை தேர்தலிலும் தொடரும்’’ என்று கூறியுள்ளார்.
விசிக, கம்யூனிஸ்ட்கள் திடீர் தயக்கம்: தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், நாளை 8-ம் தேதி செயற்குழுக் கூட்டம் கூடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசிக மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் 6 இடங்களும் பாமகவிடம் 4 இடங்களும் உள்ளன. பாமக ஆதரவு அளித்தால் விசிகவின் ஆதரவு கிடைக்காது. கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவும் கிடைக்காமல் போகும். பாமகவை சேர்க்கும் பட்சத்தில் இன்னும் 2 இடங்களை யாரிடம் பெறுவது என்ற கேள்வி எழும்.
இதற்கிடையில் ஆதரவு அளிப்பது குறித்து விசிக.வும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆலோசனை நடத்த உள்ளன. கடைசியில் அவர்கள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த 2 கட்சிகளும் ஆதரவு அளிக்க முடிவெடுத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.