புதுச்சேரி: புதுச்சேரி திருக்கனூரில் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதலால் தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.
புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் களம் காண்கின்றனர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பேரவை முன்னாள் துணைத்தலைவர் செல்வமும் போட்டியிடுகிறார்.
திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பாஜகவினர் அதிகளவில் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், எதற்காக நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். வாக்காளர் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றவர் இருக்கக்கூடாது என்று பாஜகவினரிடம் தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் ஒருவொரையொருவர் தாக்கத் தொடங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு போலீஸார் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.