தமிழகம்

“திமுகவில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையே கொள்ளையடிப்பதில் போட்டி” - கோவையில் பிரதமர் மோடி தாக்கு

‘மகளிர் இடஒதுக்கீட்டை திமுக எதிர்க்க காரணம்...’

வெற்றி மயிலோன்

கோவை: “திமுகவில் ஒரு குடும்பத்துக்குள் யார் அதிகம் கொள்ளையடிப்பது என போட்டி நிலவுவதாக மக்கள் கூறுகிறார்கள். திமுகவில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையேதான் போட்டி. இருவரில் யார் அதிகம் சொத்து சேர்ப்பது என திமுக குடும்பத்துக்குள் போட்டி” என பிரதமர் மோடி சாடினார்.

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண பெண்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என நான் விரும்பினேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகி இருந்தால் சாதாரண பெண்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாறியிருப்பார்கள். இந்த உயர்வான முயற்சி தோற்றது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதனை வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கினர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததால் திமுகவின் குட்டு வெளியாகிவிட்டது. சாதாரண பெண்கள் எம்.பி.க்கள் ஆவதில் திமுகவுக்கு விருப்பம் இல்லை

கருப்பு உடைகளை அணிந்து திமுக தனது தீய எண்ணங்களுக்கு திரை போட்டுவிட முடியாது. உங்களின் கெட்ட செயல்களிலிருந்து தப்ப முடியாது.

தமிழர்களே... இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல, தொடக்கம்தான். நாங்கள் உங்களுக்காக போராடுவோம். பெருமையாக சொல்லிக்கொள்ள திமுகவிடம் எந்த சாதனைகளும் இல்லை. அதனால் தொகுதி மறுவரையறை குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

சாதாரண பெண்கள் எம்.பிக்கள் ஆவது ஏன் திமுக, காங்கிரஸுக்கு எரிகிறது. ஏனென்றால் இந்த ஒற்றைக் குடும்பக் கட்சிகள், அதிகாரம் தங்கள் குடும்பத்துக்குள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காகவே இந்த மசோதாவை எதிர்த்தனர்.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவினரை நீங்கள் எங்கே பார்த்தாலும் கேள்வி எழுப்புங்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை ஏன் மறுத்தார்கள் என கேள்வி கேளுங்கள். தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மேலும் மேலும் வளமாகின்றன. ஆனால், தமிழகம் மேலும் மேலும் கடனில் தவிக்கிறது.

திமுகவில் ஒரு குடும்பத்துக்குள் யார் அதிகம் கொள்ளையடிப்பது என போட்டி நிலவுவதாக மக்கள் கூறுகிறார்கள். திமுகவில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையேதான் போட்டி. இருவரில் யார் அதிகம் சொத்து சேர்ப்பது என திமுக குடும்பத்துக்குள் போட்டி” என்று மோடி கூறினார்.

SCROLL FOR NEXT