சென்னை: பாஜகவின் கொள்கைகள் மற்றும் வகுப்புவாத அணுகு முறைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய நடை பயண பரப்புரை ஆக.6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும், விலைவாசி உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான வரிகளைக் குறைக்க வேண்டும், இவற்றை பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் வழங்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், தொழிலாளர் உரிமை சட்டங்களை மீட்டெடுக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆக.6 முதல் 15-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபயண பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழகத்தின் கிராமம் முதல் நகரம் வரை நடைபயணம்’ என்ற இந்த இயக்கத்தை, வடசென்னை சிங்காரவேலர் நினைவகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தொடங்கி வைக்கிறார்.