மதுரை: தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்த தென் மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நவீன்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் டிஜிட்டல் பைக் டாக்ஸி சேவைகள் சேவைகள் பலருக்கும் பயனளித்து வருகின்றன. இந்த சேவையை முறைப்படுத்தும் வகையில் தனித்திட்டம் இல்லை. விதிமீறல் தொடர்பாக போலீஸார் அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இதனால் பைக் டாக்ஸிக்கு உரிமம் வழங்கி சேவையை நடத்துவதற்கான விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், பைக் டாக்ஸியை முறைப்படுத்த
தென்மண்டல போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு அளிக்கும் பரிந்துரைப்படி பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும். இதற்கு 6 மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.