தமிழகம்

கோவை சிறுமி படுகொலை: பத்திரிகையாளர் சந்திப்பில் சிரித்த அதிகாரிகளுக்கு குவியும் கண்டனம்

டெக்ஸ்டர்

சென்னை: கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இவ்வழக்கு குறித்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஆர். வி. ரம்யா பாரதி சிரித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் அருகே சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைது நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுவதற்கு சற்று முன்பாக, ஐஜி ரம்யா பாரதி அங்கிருந்த சக அதிகாரிகளுடன் சாதாரணமாகச் சிரித்துப் பேசும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஒட்டுமொத்த மாநிலமே இக்கொடூரச் சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள வேளையில், உயர் அதிகாரி ஒருவர் இவ்வளவு உணர்வற்ற முறையில் நடந்துகொள்வதா என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

அதே நாளில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தமிழக தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா புன்னகைத்தபடி பதிலளித்த மற்றொரு வீடியோவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிறுமி கொலை தொடர்பான கேள்விகளுக்கு “அரசியல் ரீதியான கேள்விகள் கேட்கவேண்டாம்” என்று கூறியது, அவர் இச்சம்பவத்தை அலட்சியப்படுத்துவது போல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானதை அடுத்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, அரசியல் காரணங்களுக்காகத் தனது உடல் மொழி திட்டமிட்டுத் தவறாகத் திரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் இயல்பாக வெளிப்பட்ட புன்னகைக்கும், இந்தத் துயரச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கியக் குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்துள்ள நிலையில், வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். 

SCROLL FOR NEXT