மேட்டூர் அணையில் ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

 
தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து ஆக.28-ல் தண்ணீர் திறக்கிறார் முதல்வர் விஜய்!

அணையில் ஆட்சியர், ஐஜி ஆய்வு

த.சக்திவேல்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நாளை மறுநாள் (ஆக.28) முதல்வர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஆகியோர் மேட்டூர் அணையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வர் விஜய் நாளை மறுநாள் (ஆக.28) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.

இதனிடையே, அணை திறப்புக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையொட்டி, மேட்டூர் அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட உள்ள இடம், மேல்மட்ட மதகில் மின் விசையை இயக்கும் இடம், அணை பூங்கா உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, எஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

மேலும், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீஸாரும் அணையின் வலதுகரை, இடது கரை, 16 கண் மதகு, நிகழ்ச்சி நடக்கும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் வர்ணம் தீட்டும் பணிகளும், மேல்மட்ட மதகு பகுதியில் மதகுகளின் இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

மேலும், அணையில் இருந்து தண்ணீர் செல்லும் பகுதிகளில் உள்ள புற்கள், கழிவுகள் உள்ளிட்டவை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

மேட்டூர் பகுதியில் சாலையோரம் உள்ள புற்கள் அகற்றும் பணி, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பு சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT