தமிழகம்

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக வெளிநடப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அக்கறையோடு கேட்பதாக தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் செய்வது அவதூறு அரசியல். இப்படி அவதூறு செய்பவர்களை பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த 9, 10 மாதங்களாக சட்டம் ஒழங்கு டிஜிபியே இல்லை.

போதைப்பொருள் நடமாட்டத்தை தொடக்கத்திலேயே யார் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். காவல் துறையை கையில் வைத்திருந்தவர்கள் ஏன் கட்டுப்படுத்தவில்லை.

நம் ஆட்சிக்கு நிர்வாகத் திறன் இல்லை என சொல்கிறார்கள். ஊர் அடிச்சு உலையில் போட்டு, ஊழல் மேல் ஊழல் செய்து, அதிலிருந்து தப்பிப்பதற்கு பெயர்தான் நிர்வாகத் திறன் என்றால், அதுபோன்ற நிர்வாகத்திறனை நம் அரசு ஒரு போதும் செய்யாது. பெட்டி, பெட்டியாக பணத்தை வைத்துக்கொண்டு, போதைப்பொருள் பாதுகாவல் கழகம் செய்த ஒவ்வொரு ஊழலும் வெளியில் வந்துகொண்டிருக்கிறது.” என்று முதல்வர் விஜய் பேசினார். டாஸ்மாக் பற்றியும் முதல்வர் பேசினார்.

அப்போது அவையில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு தவெக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, பேசிய சபாநாயகர், “முதல்வர் பேசி முடித்தவுடன், உங்களுக்கு அவகாசம் தருகிறேன், எதிர்க்கட்சித் தலைவர் பேச வாய்ப்பு தருகிறேன்” என திமுகவினரிடம் தெரிவித்தார். ஆனாலும், அமளி தொடர்ந்து அதிகமானது. அதன் பின்னர் அவைத் தலைவர் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் பேசினர்.

அதன்பின்னரும், திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், “ எதிர்க்கட்சித் தலைவர், உங்கள் கட்சி உறுப்பினர்களை அமைதிப் படுத்த வேண்டும்” என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் திமுகவுக்கு பதில் அளித்தனர்.

இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நான் நேற்று பேசும்போது சில அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசினர். அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். அதுபோல இன்று முதல்வர் பேசும் போது சில தவறான வார்த்தைகளை சொல்லியுள்ளார். கட்சி நிதி என சொல்லியுள்ளார். தைரியம் இருந்தால் எந்தக் கட்சி நிதி என சொல்லுங்கள். ஆதாரத்தோடு சொன்னால் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

நேற்று நான் பேசி முடித்தவுடன், அவை முடிந்துவிட்டது என்று சொன்னீர்கள். நாங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டோம். வீட்டில் போய் டிவியில் பார்த்தால் இன்னொரு அமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார். இது என்ன மரபு?. நீங்கள் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா?. முதல்வர் ஆதாரத்தோடு குற்றச்சாட்டு சொன்னால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.” என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென்றால் ஆய்வு செய்து நீக்கப்படும்” என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “பல துறைகளில் கட்சி நிதி என கொள்ளையடிக்கப்பட்டது இப்போது அரசின் கஜானாவுக்கு வந்துகொண்டிருக்கிறது. மக்கள் பணத்தை தொட விடமாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம். ஒவ்வொரு ஊழலும் வெளியில் வரும்” என்று பேசத் தொடங்கினார். அப்போது முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் விஜய் உரை முடிந்தவுடன் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT