சென்னை: கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல, ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதிவரை பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அரசு கடன் தள்ளுபடி திட்டங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2025 நவ.28-ம் தேதி வெளியிட்ட மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படியும், பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழு தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தின் இன்றைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, இக்கட்டான இந்த சூழலிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதி வரை பெற்றபயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அந்த வகையில், ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 100 சதவீதமும், ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறுவிவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.
எதிர்வரும் சாகுபடி பருவத்துக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
2.50 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் குறு விவசாயிகள் என்றும், 2.51 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள் என்றும், 5.10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன் அளிக்கக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.