சென்னை: தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்காக மாநில முதல்வர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவு மூலம் விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்யவும் இயலும். இது தமிழக அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒருமித்து இருப்பதால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி, இந்தக் கோரிக்கையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இதுதவிர, மத்திய அரசின் இந்த முடிவானது, ஆதாரங்களின் அடிப்படையிலான சமூக நீதிக்கான தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்வதாகவும் உள்ளது.
இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுப்பூர்வமான விஷயமாக உள்ளது.
எனவே, இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, பொது நம்பிக்கையை உறுதி செய்ய முடியும். இல்லாவிட்டால், இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும்.
எனவே, இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும். இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும், குறிப்பிட்ட நுணுக்கங்களைக் கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும்.
எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்த மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை உருவாக்க வேண்டும். இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை (pilot study) உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும்.
தங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.