முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

தமிழினி

சென்னை: நவம்பர் 25 கோவையிலும், நவம்பர் 26 ஈரோட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நவ.25, 26 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நவ, 25 அன்று காலை கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார். மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நவ.26 அன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்கிறார்.

சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவன் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். இவ்விழாவில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT