ஆண்டிபட்டி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும் மு.க.ஸ்டாலின். படம்: நா.தங்கரத்தினம்.

 
தமிழகம்

“தமிழகத்துக்கு துரோகம் செய்ய வாக்குக் கேட்கும் பழனிசாமி” - ஸ்டாலின் ஆவேசம்

செய்திப்பிரிவு

“செய்த திட்டங்களை, சாதனைகளைச் சொல்லி நாம் வாக்குக் கேட்கிறோம். ஆனால் பழனிசாமியோ, தமிழகத்துக்கு துரோகம் செய்ய வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் விசிக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஆண்டிபட்டியில் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இது தேர்தல் மட்டுமல்ல... போர்க் களம். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொல்லைக் கேட்டாலே கசக்கிற கூட்டத்துக்கும் நமக்கும் நடக்கும் போர். நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று மத்திய அரசு திட்டமிடுகிறது.

தொகுதி மறுவரையறையை மேலோட்டமாகப் பார்த்தால் மக்களவை தொகுதிகளை அதிகரிப்பது போல் தோன்றும். அது ஒரு மாயை. ஆனால் எம்பி-க்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே சதி நடக்கிறது. அதற்காகவே கருப்புக் கொடி போராட்டம் நடத்தினோம். தமிழகம் சார்பில் நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எதிர்ப்பை தெரிவித்தார்.

அதற்கு மக்களவை தலைவர் ஓம்பிர்லா நம்மை கேலி செய்தார். இது ஸ்டாலினுக்கான தனிப்பட்ட அவமதிப்பில்லை. தமிழக உணர்வுகளை அவமதித்திருக்கிறீர்கள். திமுக இருக்கும் வரை தமிழகத்தில் காவிக்கொடி ஒரு போதும் பறக்காது.

நாடாளுமன்றத்தில் நமது அத்தனை உரிமைகளையும் பறிக்க முயற்சி நடக்கிறது. இந்த அநீதிக்கு முடிவுரை எழுத வேண்டும். அதற்கு தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டும். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். விசுவாசத்தை மட்டுமல்ல... உலக மகா துரோகியையும் அடையாளம் காட்டியவர் அவர். செய்த திட்டங்களை, சாதனைகளைக் கூறி நாம் வாக்குக் கேட்கிறோம்.

ஆனால் பழனிசாமியோ, தமிழகத்துக்கு துரோகம் செய்ய வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரால், மத்திய அரசால் தமிழகத்துக்கு ஏதாவது ஒரு நல்லதிட்டம் வந்துள்ளதா? தமிழகத்துக்கான உரிமைகளை அடகு வைத்தவர். மீண்டும் திட்டங்களை கொண்டு வருவதாகக் கூறி வருகிறார்.

சசிகலா காலில் விழுந்து அவர் காலையே வாரிவிட்டவர் பழனிசாமி. தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தர முயன்றவர் டிடிவி.தினகரன். இவர்கள் கூட்டணி எப்படி இருக்கும். தமிழகத்தின் தன்மானத்தை தக்கவைக்க மத்திய அரசை எதிர்த்து என்னோடு சேர்ந்து போர் செய்யுங்கள். இதில் நாம் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தின் உரிமை பறி போகும்.

அதிமுக, பாஜக-வுக்கு விழும் ஓட்டு நாட்டை நாசப்படுத்தும், தமிழகத்தை சிதைக்கும். பழனிசாமி ஆட்சியில் தான் தமிழக உரிமைகள் பறிபோனது. இந்நிலை மாற வேண்டும். தமிழகத்தை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். ஊழல்வாதிகளை மிரட்டியே பாஜக இங்கு கூட்டணி அமைத்திருக்கிறது. திமுக இருக்கும் வரை தமிழகத்தில் காவிக்கொடி ஒரு போதும் பறக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT