முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “தமிழ்நாட்டை பாதிக்கும்படியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை கூட்டும்படியோ தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடு தன் எதிர்ப்பை கடுமையாக காட்டும். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும்” என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்தது அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தேர்தல் பிரசாரத்துக்காக, நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாலும், இந்தக் கடமையை தவிர்க்க முடியாது.
நாளை மறுநாள் ஏப்ரல் 16, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு - மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘Delimitation’ என்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் ‘புல்-டோஸ்’ செய்யப் போகிறார்கள். முதலில் இருந்தே இது பற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்து, இதனால் பாதிப்படையவுள்ள மாநில முதலமைச்சர்களையும் - முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம்.
“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள்; அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்” என ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா? “தென்மாநிலங்கள் பாதிப்படையாது” என நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் அவர்கள் உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டோம். பதில் இல்லை. இதுக்காகப் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை.
இப்படி, நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், திமுக மட்டுமல்ல; எந்தக் கட்சியோடும் - எந்த மாநிலத்தோடும் - எந்த ஆலோசனையும் நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு செய்யப் பார்க்கிறார்கள். நேற்று, மரியாதைக்குரிய அம்மையார் சோனியா காந்தி அவர்களும், நாம் கேட்கும் அதே கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்! பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட யாருக்குமே பதில் இல்லை!
இப்படி அவசரக அவசரமாக ‘Delimitation’ செய்ய நினைப்பது, பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்! இன்னும் சொன்னால், மாநில உரிமைகளைப் படுகொலை செய்திருக்கிறார்கள். இந்த ‘Delimitation’-ஐ எப்படி செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தச் சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி, இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் என்றால், கண்டிப்பாக ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்று, அனைவருக்குமே அந்தச் சந்தேகம் வலுவடைகிறது. தென்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். நான் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் , பிரதமர் மோடிக்கும், இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
“இது தேர்தல் காலம்தானே!” “இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும்!” “நாம் டெல்லியில் சைலண்டாகத் தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்து விடலாம்” என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள்.
சொல்லும் நான் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். 50-கள், 60-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.
“என்ன இவன் மிரட்டுகிறான்?” என்று நினைக்காதீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஆம், தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது. தேர்தல், ஆட்சி அதிகாரம் இது எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்! எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்! மாநில உரிமைகள்தான் முக்கியம். அதுதான், அண்ணாவும் - கலைஞரும் எங்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற உயிர்க் கொள்கை.
தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு!. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடியே மீண்டும் சொல்கிறேன்... இது தமிழ்நாட்டில் இருந்து உங்களை நோக்கி விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.