திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.படம்: ஆர்.வெங்கடேஷ்
திருவாரூர்: ‘‘திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம்’’ என்று திருவாரூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நன்னிலம் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த 2026 தேர்தலின் சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டேன். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இன்று தலைவர் கருணாநிதியை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் இங்கிருந்து தொடங்குகிறேன்.
திருவாரூர் பெயர் அழகு. அதைவிட திருவாரூர் தேர் பேரழகு. நேற்று முன்தினம் தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 1948-க்குப் பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய செய்துள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியது, ஆட்சியர், நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகங்கள், நகராட்சி கட்டிடம், புதிய பேருந்து நிலையம், மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, மன்னார்குடி அரசு கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை, மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி, டி.ஆர்.பாலு முயற்சியால் செம்மொழி உட்பட 5 புதிய ரயில்கள் என ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். நெல் ஜெயராமனுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வருகிறோம்.
கடந்த 2021-ல் எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து பெண்கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவு, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தேன். பொங்கல் தொகுப்பு ரூ.3,000 வழங்கினோம்.
தமிழகத்தை பார்த்து பல மாநிலங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி உள்ளனர். தேர்தலைக் காட்டி அதை நிறுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்து காசை உருவ திட்டம் போடும் பாஜகவுக்கு, திராவிட மாடல் நலத்திட்டம் மூலம் மக்களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்பது எரியத்தான் செய்யும். யார் வயிறு எரிந்தால் என்ன? மக்களின் மனசு நிறையணும் என்பதுதான் என் லட்சியம். அதனால்தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கினோம்.
எல்லாத் திட்டத்திலும் தமிழகம் டாப்பில் இருப்பதுதான் பாஜக தலைமையில் செயல்படும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளது. தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என திட்டமிட்டு ஏராளமான போலி செய்திகளைப் பரப்பிப் பார்த்தனர். கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் பரப்பியது அனைத்தும் அவதூறு என உண்மை வெளிப்பட்டு மக்கள் முன் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.
கடந்த 2011-21 வரை தமிழகத்தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதிமுக, 2014-லிருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாஜகவுடன் சரணாகதியடைந்து கூட்டணி அமைத்துள்ளது. அவர் நம் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து விட்டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்தோம் என புலம்புகிறார்.
அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது. தொலை நோக்கு பார்வையும் இல்லை. அவரது உளறல்களில் ‘ஹை லைட்’ எது தெரியுமா? எப்படி உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் எனக் கேட்டால் வரியை உயர்த்தி நிறைவேற்றுவேன் என்கிறார். அதனால் தான் பழனிசாமியை எளிதாக மிரட்டி அடிமைக் கூட்டணியில் பாஜக வைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது, திராவிட மாடல் ஏற்படுத்திய வளர்ச்சியை அழிப்பதுதான் என்டிஏ கூட்டணியின் நோக்கம்.
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தங்களுக்கு வலிமையில்லை என்பதால் அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. பொதுவாக பாஜக மக்களுக்கு நல்லது செய்யாது. தேர்தல் வந்தால் பட்ஜெட்டில் கண்துடைப்புக்காக சில அறிவிப்புகளைப் கொடுப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதைக்கூட செய்ய மனமில்லாத வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை. இத்தனையும் சமாளித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளோம்.இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்பதால் நம் வீட்டு குழந்தைகளுக்கான கல்வி நிதியைக் கூட தரவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, என்டிஏவை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.
இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க பாஜக- அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது திமுக கூட்டணிக்கான வெற்றி அல்ல, இது தமிழகத்துக்கான வெற்றி. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,தமிழகத்தைக் காக்க மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.