சென்னை: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஒரு கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டாக்டர் பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களாட்சியில் இத்தகைய வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தற்போது அவர் நலமாக உள்ளார் என அறிந்து நிம்மதி கொள்கிறேன். அவருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இவ்வேளையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.