தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கிய 116 பேர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 2-வது நாளான நேற்று தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தொகுதிகளுக்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது. இதில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதனுடன், யாரை வேட்பாளராக தலைமை நியமித்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும். இடம் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் எனவும், பெரும்பாலானவர்களிடம் உங்கள் தொகுதியில் தவெக எவ்வளவு ஓட்டு வாங்கும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் எம்எல்ஏ.வாக ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) இருக்கிறார். நேற்றைய நேர்காணலில் கிள்ளியூர் தொகுதியை மீண்டும்காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கலாம் என்று ஒருதரப்பினரும், தரக்கூடாது என்று மற்றொரு தரப்பினரும் முதல்வரிடம் தெரிவித்ததாக பேசப்படுகிறது. தொடர்ந்து நேர்காணல் முடிந்து வெளியே வந்த கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அறிவாலயம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விருப்ப மனுக்கள் அளித்தவர்களை நேர்காணலில் பங்கேற்கவிடாமல் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தடுத்துநிறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.