சென்னை: பணியின்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. சில ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்குவது பொதுமக்களின் புகார் மற்றும் பேருந்தின் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும்போது கவனச் சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துநரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
பணி முடிந்த பிறகு செல்போனை நடத்துநரிடமிருந்து பெற்றுச் செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன்கள் வைத்திருப்பதாக பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.