சென்னை: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொதுப் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ரூ.127 கோடியில் 164 டீசல் பேருந்துகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகள் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் நேற்று கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், போக்குவரத்து துறை செயலர் மா.வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மொத்தம் உள்ள பேருந்துகளில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு 65 பேருந்துகள், கோட்டம் வாரியாக விழுப்புரம்-36, சேலம்-39, கோவை-25, கும்பகோணம்-49, மதுரை-42, திருநெல்வேலி-44 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த பிறகு, சென்னை அண்ணா சதுக்கம் - பெரம்பூர் வழித்தடத்தில் செல்லும் 29ஏ புதிய மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணம் செய்தார்.
அந்த பேருந்து தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு கலங்கரை விளக்கம் வரை சென்றது. அதில் பயணித்த முதல்வர் விஜய், நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டார். நடத்துநரை தனது அருகில் அமரச் சொல்லி அவர்களது பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்கு சென்று அமர்ந்த முதல்வர், சாலையோரம் நிற்கும் பயணிகள், போக்குவரத்து ஊழியர்களைப் பார்த்து கையசைத்தபடியே, பேருந்து பயணத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். கலங்கரை விளக்கம் வரை சென்று, மீண்டும் அதே பேருந்தில், முதல்வர் தலைமைச் செயலகம் திரும்பினார்.