பாதிக்க்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர்கள்
மேட்டூர்: கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி தமிழக முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ 7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். சிறுமியின் பெற்றோர் மற்றும் பாட்டியை வீட்டின் உள்ளறைக்கு அழைத்துச் சென்று பேசினர். அப்போது, தமிழக முதல்வர் விஜய் சிறுமியின் தந்தை மற்றும் பாட்டியிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட எஸ்.பி கவுதம் கோயல் உடனிருந்தனர்.
சிறுமியின் தந்தை மற்றும் பாட்டி நிருபர்களிடம் கூறியதாவது: “இந்த சம்பவம் குறித்து கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சிறுமியை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன். உங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் விஜய் தெரிவித்ததாக கூறினர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் - மாநில அமைச்சர்கள் சந்திப்பு
பின்னர், போக்குவரத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகப்பெரிய இழப்பு. இது தொடர்பாக முதல்வர் வருத்தத்தையும், அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இது போன்ற எந்த ஒரு சம்பவமும் இனி தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு விரைந்து முடித்து கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியின் கீழ் ரூ 7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
மத்திய-மாநில அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திப்பு: கோவையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்து விட்டு வந்தனர். அப்போது, அமைச்சர்கள் தமிழன் பார்த்திபன் மற்றும் சம்பத்குமார் வெளியே காத்திருந்தனர்.
பின்னர், பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் வெளியே வரும் போது தமிழக அமைச்சர்களை நேருக்கு நேராக சந்தித்து பேசி கொண்டனர். அப்போது, தமிழக அமைச்சர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, கட்சி நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினருக்கு வீடு இல்லை, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.