ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் ஆதவ் அர்ஜுனா இடம் பிடித்துள்ளார். இவர் லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆவார். லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரியில் லஜக கட்சியைத் தொடங்கினார். அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்க முதலில் முயற்சி செய்தும், விஜய் தரப்பிலிருந்து பதில் கிடைக்கவில்லை. அதையடுத்து என்டிஏ கூட்டணியில் இடம் பிடித்து எம்எல்ஏவாகியுள்ளார். புதுச்சேரி அமைச்சராக முயற்சித்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனாவை தொடர்ந்து ஜோஸ் சார்லஸ் விமர்சித்து வருகிறார். அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வந்தார். தற்போது தனது சகோதரி கணவரான ஆதவ் அர்ஜுனா தமிழக அமைச்சராகியுள்ளது பற்றி ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறியதாவது: ஆதவ் அர்ஜூனாவை சரியாக கட்டுப்பாட்டுடன் விஜய் கண்காணித்து பார்த்துக் கொள்ளவேண்டும். தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளாவிட்டால், நாட்டுக்கு தவறாகிவிடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.