சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணியினரை சந்தித்துப் பேசியது அதிமுகவில் சலசலப்பை கூட்டியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் விஜய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக அக்கட்சி எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி என இரு பிரிவுகளாக செயல்படுகிறது. பழனிசாமியை சட்டப்பேரவைக் குழு தலைவராக்க 17 எம்எல்ஏக்களும், வேலுமணியை தலைவராக்க 30 எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது.
தேர்தலுக்குப் பிறகு திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராக தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பழனிசாமி கூறினார். இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.
தேர்தலுக்கு முன்பு இருந்த எந்தக் கூட்டணியிலும் இனி அதிமுக இருக்காது. இந்தக் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்த தீர்மானத்தின்படி, தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று கூறினார். இதற்கு பழனிசாமி தலைமையிலான பிரிவு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
குறிப்பாக, ‘அதிமுக - திமுக கூட்டணி என்ற ஊடக வதந்திகளை நம்பிய நீங்கள், அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் தவெகவிடம் அமைச்சர் பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக செய்திகள் வருவதையும் ஏற்கிறீர்களா?’ என சி.வி.சண்முகம் தரப்புக்கு அதிமுக தலைமை வினவியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் நாளை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவின் ஒரு தரப்பு அவரை ஆதரித்துள்ளதால், அவருக்கான பெரும்பான்மை எண்ணிக்கை அதிகரிப்பது உறுதியாகியுள்ளது.