சென்னை: எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைப் பெறும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்தார்.
இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (ஜூலை 8) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் அரசு மருத்துமனையில் நடந்த ஆய்வின்போது அங்கு சிகிச்சையில் இருந்த தாய்மார்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நலம் விசாரித்த முதல்வர் விஜய், அவர்களின் குழந்தைகளையும் கையில் தூக்கி கொஞ்சினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.