சென்னை: சேலத்தில் பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவிவரும் உச்சக்கட்ட மோதல் போக்கால், கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர். கட்சியில் பெரும்பாலானோர் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி வசம் சென்றது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த அன்புமணி, 18 இடங்களை பெற்று, வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அனைத்திந்திய புரட்சி தலைவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய வி.கே சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார். இருவரும் வேட்பாளர்களை அறிவித்தனர்.
சசிகலா பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவு சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென்று மயக்கமடைந்த ராமதாஸை, அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிக்சிசை அளிக்கப்பட்டது.
இது குறித்து, விருத்தாசலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அன்புமணிக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘அவருக்கு ஏதாவது ஆச்சுனா... இவர்களை நான் சும்மா விட மாட்டேன்’ என்று அன்புமணி ஆவேசமாக கூறினார்.
இதற்கிடையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ராமதாஸின் உடல்நிலை குறித்து விசாரித்தார். தனது உடல்நலனில் அக்கறை கொண்டு பேசிய முதல்வருக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.