தமிழகம்

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் துறையில் 15 பேருக்கு பதக்கம்: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழி்ப்பு தினத்தையொட்டி, காவல் துறையைச் சேர்ந்த 15 பேருக்கு பதக்கம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ‘போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டுக்கான பதக்கங்களை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்த சுக்லா (கடலூர்), ஜி.சந்தீஷ் (ராமநாதபுரம்), சென்னை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் லட்சுமணன், சென்னை பெருநகரக் காவல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வை.மனோஜ்குமார், திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் மோ.கண்ணன், கோவை மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் பொ.காமராஜ், மேலும், தேனி மாவட்டம் குரங்கணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மு.அருண், தலைமைக் காவலர்கள் கே.ராஜ்குமார் (குமுளி), க.கார்த்திகேயன் (நாகப்பட்டினம் வேட்டைக்காரனிருப்பு), அ.குத்புதீன் (புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம்), திருப்பூர் மாநகரம் நல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் க.ராமர், கரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் உ.பி.செந்தில் குமார், தலைமைக் காவலர்கள் மு.அய்யப்பன் (திருநெல்வேலி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), ந.பிரேம்குமார் (சென்னை பெருநகரக் காவல் அசோக் நகர்), ச.ராமகிருஷ்ணன் (தேனி போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு) ஆகியோருக்கு முதல்வரின் பதக்கம் வழங்கப்பட உள்ளது. சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் இந்த பதக்கங்கள் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT