கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர்: தமிழக விவசாயிகளுக்கு நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்த கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆனால் எந்த உத்தரவு வந்தாலும் அதையெல்லாம் மீறி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது: மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், எந்த உத்தரவு வந்தாலும் அதையெல்லாம் மீறி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல, 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த பழனிசாமி ஆட்சியில், மாநில அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையாக ஒரு ரூபாய் கூட உயர்த்தித் தரவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.2,500 கோடி நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது போலவே அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கப்படும்.
தேர்தலில் தோல்வி பயத்தில் ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என தெரிவித்து, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுடைய வாக்குரிமையை பறித்தனர்.
தற்போது தமிழகத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை மாற்றி, தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து தேர்தலில் தில்லுமுல்லு செய்ய பார்க்கிறார்கள்.
கடந்த முறை ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இல்லை, கட்டம் சரியில்லை என்று தெரிவித்தனர். அதை உடைத்து முதல்வர் ஆனேன்.
இப்போது திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்காது என்கின்றனர். கடந்த முறையை போல, இந்த முறையும் உடைத்து மீண்டும் முதல்வர் ஆவேன்.
நாம் போராடுவது ஒரு கட்சியோட வெற்றிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றிக்காக என்பதை உணர்ந்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.