சென்னை: பொங்கல் தினத்தையொட்டி தமிழக காவல்துறைச் சேர்ந்த 4,184 பேருக்கு முதல்வரின் பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறைசெயலர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணி, தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணி சேவைகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/ பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 4 ஆயிரம் பணியாளர்களுக்கு 'தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்' வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திரகம்மியர் ஓட்டி, சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படவுள்ளது.
மேலும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), முதல் நிலை வார்டர்கள் (பெண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 58 அலுவலர்களுக்கும் 'முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்' வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி 2026 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர் கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு 'தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணிப் பதக்கம்' வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இப்பதக்கங்கள் பெறுவோருக்கு அவரவர் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்கத் தொகை வழங்கப்படும். இந்த பதக்கம் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு உள்துறை செயலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.