தமிழகம்

இ-ஃபைலிங் முறையை நிறுத்தக் கோரி ஜன.7-ல் ஐகோர்ட் முற்றுகை: கூட்டு வழக்கறிஞர்கள் சங்கம்

கி.மகாராஜன்

மதுரை: தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்கக் கோரி ஜன.7ல்- சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு - புதுச்சேரி கூட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் கூறியுள்ளார்.

அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை நேரடியாகவும், மின்னணு முறையிலும் தாக்கல் செய்யலாம். 1.12.2025 முதல் மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படுவதில்லை.

அனைத்து வழக்குகளையும் இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். குற்ற வழக்குகளில் வழக்கில் தொடர்படைய நபர்கள் நீதிமன்றத்துக்கு வருவது விசாரணை நாளில் தான் தெரியும். வர முடியாத சூழல் இருந்தால் ஆஜராக விலக்கு கோரி இ-ஃபைலிங் முறையில் மனுத் தாக்கல் செய்தால் அது 3 நாட்களுக்கு பிறகுதான் விசாரணைக்கு வரும். அதற்குள் பிடியாணை பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளது.

உரிமையியல் வழக்குகளில் நேரடி வழக்கு தாக்கல் முறையில் அவசர வழக்குகள் காலையில் தாக்கல் செய்தால், மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுக்கப்படும். இ-ஃபைலிங் முறையில் அவசர உரிமையியல் மனுக்கள் தாக்கல் செய்தால் 3 நாட்களுக்கு பிறகே விசாரணைக்கு எடுக்கப்படும் நிலை உள்ளது. இந்த முறையை செயல்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்களும் இல்லை.

வழக்கறிஞர்கள் இ-ஃபைலிங் முறையை எதிர்க்கவில்லை. இம்முறைக்கு வலுவான இணையதள வசதி இருக்க வேண்டும். குறிப்பாக மலையடிவாரப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் போதுமான இணையதள வசதியில்லை. அப்படியிருக்கும் போது அந்த நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையில் வழக்குகள் தாக்கல் செய்வதில் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியது வரும்.

குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பவர்களே இணையதளத்தில் தனி முகவரியை உருவாக்கி அதன் வழியாக மனுக்களை தாக்கல் செய்யக் கூறப்பட்டுள்ளது. இதனால் வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

இதனால் இ-ஃபைலிங் முறையில் உள்ள குழப்பங்களையும், குறைபாடுகளையும் சரிசெய்யக் கோரி வருகிறோம். இது தொடர்பாக தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இ-ஃபைலிங் முறையில் உள்ள குறைபாடுகளை களையுவும், அதுவரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்கக் கோரியும் 5.12.2025 முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நகல் எரிப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியாவில் கேரள மாநில நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உரிய கட்டமைப்பு வசதியில்லை. இதனால் கேரளத்தைப் போல் தமிழகத்தில் இ-பைலிங் முறையை அமல்படுத்தவும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜன.7-ல் சென்னை உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்பார்கள். தற்போது இ-ஃபைலிங் முறை தொடர்பாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், இந்தப் பயிற்சியில் பங்கேற்குமாறும் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்கமாட்டார்கள்” என்று அவர் கூறிவார்.

மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT