எம்.எஸ் தோனி | கோப்புப் படம்

 
தமிழகம்

சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி மனு: தோனி அக்.9-க்குள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்து வழங்குமாறு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த மனுவுக்கு தோனி அக்.9-ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி அவதூறு பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுதொடர்பாக சம்பத்குமார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘தோனியின் வாக்குமூலப் பதிவை நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாவில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசுக் கட்டிடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும். அதை கண்காணிக்க நீதிபதியை நியமிக்க வேண்டும். வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோவை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தோனி அக்.9-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT