பொன்முடி | கோப்புப் படம்.

 
தமிழகம்

பொன்முடி ஆஜராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 24-ம் தேதி அவர் நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியையும் இழக்க நேரிட்டது.

          

இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரான பொன்முடிக்கு எதிராக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், “பொன்முடியின் வெறுப்பு பேச்சு, மத ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புண்படுத்தும் வகையில் உள்ளதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த புகார் மனு மீதான விசாரணை ஜார்ஜ் டவுனில் உள்ள எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி சவுந்திரபாண்டியன், இந்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதாகக் கூறி, முன்னாள் அமைச்சரான பொன்முடி மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT