தமிழகம்

சென்னையில் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் 2-வது நாளாக அவதி

செய்திப்பிரிவு

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் 2-வது நாளாக நேற்றும் அவதியடைந்தனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11 ஆகிய நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையத்தின் 5. 6-வது நடைமேடை வழியாக இயக்கப்படுகின்றன.

          

இவ்வாறு நடைமேடைகள் மாற்றப்பட்டதால், தண்டவாளங்களைக் கடப்பது மற்றும் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் சிக்னலைக் கடந்து செல்ல 7 முதல் 10 நிமிடங்கள் ஆனது. இதனால் 2 மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் தாமதமாகின. இதன் காரணமாக ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பயணிகள் 45 நிமிடங்கள் வரை காத்திருந்தனர்.

இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ரயில் தாமதம் காரணமாக, மின்சார ரயில்களில் எழும்பூர் நிலையம் வந்து, விரைவு ரயிலைப் பிடிக்க வந்தவர்களில் பலர் ரயிலைத் தவறவிட்டனர். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

‘மக்கள் ஆதரவு தர வேண்டும்': இதற்கிடையே, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும்.

இந்த தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை புரிந்துகொள்கிறோம். எனினும், லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் நீண்ட கால நன்மைகளை வழங்க இவை அவசியமானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT