சென்னை மாவட்டத்தில் உள்ள 1000 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் ‘நம்ம தங்கா’ எனும் காகம் சின்னத்தை மையப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை.
சென்னை: சென்னையில் ஆயிரம் பேருந்து நிறுத்த நிழற்குடைகளில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இது குறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும், வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் 13 எல்இடி தொலைக் காட்சிகளுடன் கூடிய தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்து, வீடுகள் தோறும் திடக் கழிவுகள் சேகரிக்கும் பேட்டரியால் இயங்கக் கூடிய மூன்று சக்கர வாகனங்கள், காம்பாக்டர் பெரிய வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் ‘நம்ம தங்கா’ எனும் காகம் சின்னத்தை மையப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், எனது வாக்கு எனது உரிமை என்ற சுயபுகைப்பட பதாகை, கடற்கரையில் மணற் சிற்பம், பொம்மலாட்ட நிகழ்ச்சி, பாரா க்ளைடிங், மனிதச் சங்கிலி, ரங்கோலி, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு, தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள், திடீர் குழு நடனம் மற்றும் தேர்தல் தொடர்பான விநாடி வினா, கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,000 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் ‘நம்ம தங்கா’ எனும் காகம் சின்னத்தை மையப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.