சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் தமிழகம் முழுவதும் இரண்டு நாள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20, 21ஆம் தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 20-ல் கோவை நகரில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு உரையாற்றவுள்ளார். அதன்பின்னர், ஓசூர் மற்றும் தளி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து, அங்கு நடைபெறும் மற்றொரு பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். மாலையில் சென்னை வந்தடையும் அவர், ஆவடி பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டமான ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
ஏப்ரல் 21 அன்று மதுரை செல்லும் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து சாத்தூர் சென்று சமூகத் தலைவர்களைச் சந்திப்பதுடன், பிரச்சார நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மாலையில் அவரின் இப்பிரச்சாரப் பயணம் நிறைவடைகிறது.