இடம்: மதுரை
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26-ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா முதல் வட கர்நாடகாவின் உள்பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 21, 22) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து, 26-ம் தேதி வரை லேசான மழை நீடிக்கும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 77 டிகிரி முதல் 93 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் 9 செ.மீ., சங்கரி துர்க்கம், கடலூர் மாவட்டம் வேப்பூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 8 செ.மீ., சேலம் மாவட்டம் மேட்டூரில் 7 செ.மீ., சந்தியூர், கரூர் மாவட்டம் குளித்தலை, கடலூர் மாவட்டம் லக்கூரில் 6 செ.மீ., தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, அரியலூர் மாவட்டம் செந்துறை, கடலூர் மாவட்டம் கீழச்செருவை, கள்ளக்குறிச்சியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.