படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் 11-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக 12-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை தீவிரமடைகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ம் தேதி வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
மரத்வாடா முதல் கடலோர கர்நாடகா, வட உள் கர்நாடகா மற்றும் மத்திய மகாராஷ்ட்ரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 10) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 11 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 13-ம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 14, 15 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறுதினமும் ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
12-ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 13-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், மதிருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
14-ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்துர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
15-ம் தேதி கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் நாமக்கல் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை முதல் 13-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 75 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 17 செமீ, நாலுமுக்கில் 16 செமீ, காக்காச்சியில் 14 செமீ, மாஞ்சோலையில் 11 செமீ, தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 9 செமீ, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 9 செமீ, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.