தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (ஜூன் 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு கேரள பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. வடக்கு லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது.

இவை காரணமாக தமிழகத்தில் நாளையும் (ஜூன் 21), நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 22-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ, வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் ஆவூரில் 14 செமீ, அரியலூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பெருமாண்டி, சிவகங்கை மாவட்டம் சத்தரசங்கோட்டையில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT