தமிழகம்

மதத்தில் இருந்து வெளியேறாமல் ‘சாதி, மதம் இல்லை’ என சான்றிதழ் கோர முடியாது: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி மற்றும் மதம் இல்லை என் சான்றிதழ் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையை சேர்ந்த செல்வ மாணிக்கம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் சாதி மற்றும் மதம் இல்லை என சான்றிதழ் கேட்டு, திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். அவர் அவ்வாறு சான்றிதழ் வழங்கு வது தொடர்பாக அரசின் உத்த ரவு இல்லாததால் சான்றிதழ் வழங்க மறுத்து 2025ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு சாதி மற்றும் மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

          

இந்த மனுவை விசாரித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் பெற்றோரும், மனுதாரரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். மனுதாரர் இந்து மதத்தை கைவிட்டு விட்டாரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த பதில் எதிர்மறையாக இருந்தது. மனுதாரர் இந்து மதத்தை கை விடாமல் மதம், சாதி இல்லை என சான்றிதழ் கேட்டு அளிக்கும் விண்ணப்பத்தை அதிகாரிகளால் பரிசீலிக்க முடியாது.

மனுதாரர் இந்து மதத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் தனது மதத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்தால், அதை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி பரிசீலிக்கலாம். விதிகள் இல்லாவிட்டால் தேவையான விதிகளை உருவாக்கிய பிறகு மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT