மதுரை: தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் தென்னை, பனை மரங்களில் கள் இறக்கவும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மறு ஆய்வு செய்யவும், தென்னை மற்றும் பனங் கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கையை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இதே கோரிக்கை தொடர்பாக நிலுவையில் இருக்கும் மற்ற வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.