உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

முதல்வர் குறித்து சர்ச்சைப் பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு: சட்டப்பிரிவுகள் 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) பிஎன்எஸ், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (The Tamil Nadu Prohibition of Harassment of Women Act) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67, அதாவது பாலியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் போலீஸார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், திமுகவினர் தவெக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சையில் தவெக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுகவினரும் உதயநிதி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT