சென்னை/கரூர்: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் கரூரில் பிப்.10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “பொதுவாழ்வில் பங்கேற்கும் பெண்களை வேசிகளாகச் சித்தரிக்கும் இத்தகைய அழுகிப்போன மனநிலை கொண்டவர்களுக்கு எதிராக் சமூகம் திரள வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எம்.பி ஜோதிமணி குறித்து பாஜக நிர்வாகி அவதூறாக பேசியிருப்பதற்கு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜோதிமணியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் நேற்றுமுன்தினம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.