மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்குத் தடை கோரிய வழக்கின் விசாரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கடந்த ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளைப் பலியிட தடை விதிக்கவும், மலையில் அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், இந்த உரிமையை நிலை நாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தர்கா நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு இறுதியானது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் கடந்த 21-ம் தேதி கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழா தொடங்கியது.
வரும் ஜன. 6-ம் தேதி வரை விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு சமைக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, கந்தூரி விழாவுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக தர்கா நிர்வாகத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அப்போது, “அதுவரை தற்போதைய நிலை நீடிக்க உத்தர விட வேண்டும்” என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, “ஜன. 6-ம் தேதிதான் விழா நடைபெறுகிறது. வழக்கு 2-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது” என்று உத்தரவிட்டார்.